கூவத்தின் கரைகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் வாழ்வில் விடிவு பிறக்குமா?

A concerned citizen accompanies an official on his visit to the Navalur Padappai slum resettlement colonies, and comes back saddened, not only by the pathetic living conditions and lack of facilities there, but also the extreme apathy of the government.

2015 வெள்ளத்திற்கு பிறகு தொடர்ந்து கூவத்தையும், அடையாற்றையும் மீட்டெடுக்கும் பணி குறித்து நாம் தொடர்ந்து எழுதி வருகிறோம். அதில் இருக்கும் சவால்கள், சிக்கல்கள் – குறிப்பாக கூவத்தின் ஓரமும், அடையாற்றின் ஓரமும் வாழ்ந்த மக்கள் மறு குடியமர்த்தப்பட்டதை குறித்தான கட்டுரைகளை நம் தளத்தில் எழுதியுள்ளோம். (இணைப்புகள் கட்டுரையின் முடிவில்)

நீர்நிலைகள் மீட்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் அதே சமயம் இங்கு வாழ்ந்த மக்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்ட அவர்கள் வாழ்விடத்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள பெரும்பாக்கம், படப்பை நாவலூர், கூடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் எப்படி வாழ்கிறார்கள் என்பது மிக முக்கியமான ஒன்று. அடிப்படை தேவையான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு – இவை மக்களுக்கு சரியாக கிடைக்கிறதா என்ற கேள்விக்கான பதில் மிக மோசமானதாகவே இருந்து வருகிறது.

மக்களின் குறைகளை கேட்கும் ஆணையர் இளங்கோ Pic: D Jagadheeswaran

பெண்ணுரிமை இயக்கம் தொடுத்த வழக்கு

குடிசை பகுதி மக்களுக்காகவும், வீட்டு வேலை செய்யும் பெண்களுக்காகவும் தொடர்ந்து போராடி வரும்  பெண்ணுரிமை இயக்கம் இது குறித்த ஒரு வழக்கு டிசம்பர் 2017ஆம் ஆண்டு தொடுத்தது. இதுவரை மறுகுடியமர்த்தப்பட்டவர்களுக்கு மேலே சொன்ன அடிப்படை தேவைகள் மூன்றுமே பூர்த்தியாகவில்லை என்றும், இனியும் இதுபோன்ற கட்டாய வெளியேற்றம் கூடாது என வழக்கில் சொல்லப்பட்டது.

ஒரு பக்கம் வழக்கு காலதாமதப்படுத்தப்பட, இன்னொரு பக்கம் வெளியேற்றம் தொடர்ந்தது. விடுமுறை கால நீதிமன்ற அமர்வில் வழக்கை கொண்டுவந்து வாதாடிய போது, அரசாங்க தரப்பு தங்களின் பதிலில் சில விளக்கங்களை கொடுத்தது.

  • 100 அடியில் மிகவும் சிரமத்தோடு வாழ்ந்து வந்தவர்களை 400 அடியில் வசதியோடு வாழ வழிவகைசெய்துள்ளோம்.
  • அரசு நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் இதுவரை 12702 பேர் கலந்துகொண்டு 5104 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
  • குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்கள், மாணவ மாணவிகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போதுமானவை கட்டப்பட்டுள்ளன.
  • 4200 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

பெண்ணுரிமை தரப்பு இதை மறுத்ததோடு, புதிதாக வெளியேற்றப்படும் மக்களுக்கு முறையான அறிவிப்பு (Notice) கூட தராது காலிசெய்யப்படும் அவலத்தை சுட்டிக்காட்டியது. அவர்கள் அனைவரும் ஏதோ முகாமில் தங்கியிருப்பது போல உடனடியாக தங்கள் உடைமைகளை எடுக்க சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டு பெரும்பாக்கத்தில் இறக்கிவிடப்படுகிறார்கள் என்று வாதிட்டது. இரு தரப்பையும் கேட்ட விடுமுறை அமர்வு நீதியரசர்கள் பார்த்திபன் மற்றும் ஆதிகேசவலு கூவம் ஆற்றின் கரையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் மறுவாழ்வு பணிகளை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையராக கே.இளங்கோவை நியமித்தது.

வழக்கறிஞர் ஆணையரின் விரைவான, விவேகமான செயல்பாடு

வழக்கறிஞர் ஆணையர் இளங்கோ உடனடியாக களத்தில் இறங்கினார். மே மாத இறுதியில் பெரும்பாக்கம் சென்று அங்கிருக்கும் ஒவ்வொரு பிளாக்கிலும் இருக்கும் பிரச்சனைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தது குறித்த கட்டுரையை சில ஊடகங்கள் பதிவு செய்தன.

ஜூன் மாதம் மற்றொரு பகுதியான நாவலூர் படப்பைக்கு தனது விசாரணையை நடத்த சென்றார். தொடர்புடைய அரசு அதிகாரிகளான மாவட்ட வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்ககட்டளையின் ஆலோசகர், காவல் நிலைய துணை ஆய்வாளர் அவருடன் வந்தனர். ஒரு அரசாங்க பிரதிநிதி – அமைச்சரோ இல்லை சட்டமன்ற உறுப்பினரோ வரும்போது செய்யப்படுவது போல் சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு இரு புறமும் சுண்ணாம்பு கொட்டிவைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு பிளாக்காக செல்ல துவங்கினார். ஒவ்வொரு கட்டிடடத்தில் இருக்கும் குறைபாடுகள், சேதங்களை மக்கள் சுட்டுக்காடினார்கள். சிலர் தங்கள் வீட்டிற்கு உள்ளே அழைத்து சென்று கட்டிடத்தில் இருக்கும் சேதங்களை காட்டினார்கள்.

கழிவுகள் வெளியேறும் குழாய்கள் எல்லாமே திறந்து கிடந்தன. அதிகாரிகளிடம் விசாரணை செய்யும்போது அவற்றை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். கழிவுத் தண்ணீர் பக்கத்தில் இருக்கும் ஏரிக்கு சென்றுகொண்டிருந்தது. அதனையும் மக்கள் சுட்டிக்காடினார்கள். அதனால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள் குறித்தும் விளக்கினார்கள்.

மக்களின் பெரும் குறையாக பேருந்து வசதி இருந்தது. பெருங்களத்தூர் செல்வதற்கு மட்டுமே பேருந்து இருப்பதாகவும், தாம்பரத்திற்கோ இல்லை கோயம்பேடு செல்வதற்கோ நேரடியான பேருந்து வசதி இல்லை என தெரிவித்தனர். நாம் அங்கு நின்று கொண்டிருந்தபோதே மக்களை ஆச்சயர்படுத்தும் விதமாக தாம்பரம் செல்லும் 2 பேருந்துகள் – ஒன்றன்பின் ஒன்றாக வந்தது.

அடுத்ததாக அங்கன்வாடி சென்றார். அந்த அங்கன்வாடி நேற்று இரவு தயார்படுத்தப்பட்டு, இன்று காலை பெயிண்ட் அடிக்கப்பட்டதாக மக்கள் கூறினர். அங்கன்வாடியில் ஆசிரியைகள் இல்லாததையும் புகார் செய்தனர். அதேபோல நியாய விலை கடையிலும் பெயர்ப் பலகை நேற்று இரவு அவசரமாக வண்ணம்பூசப்பட்டதாக மக்கள் சொன்னார்கள்.

இரவோடு இரவாக வண்ணம்பூசப்பட்ட நியாய விலைக்கடை Pic: D Jagadheeswaran

எல்லா பிளாக்கிலும் கட்டுமான குறைபாடு, சேதம் தென்பட்டது. எல்லாவற்றிருக்கும் ஏதோ ஒரு சமாளிப்பு காரணத்தை அதிகாரிகள் சொன்னார்கள். முதன் முறையாக துப்புரவு பணியாளர்கள் பல நாள் குப்பையை தோண்டி, லாரிகளில் ஏற்றினார்கள்.

பல நாள் குப்பை சுத்தம் செய்யப்படுகிறது Pic: D Jagadheeswaran

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சரியாக செயல்படவில்லை என்றும் தெரிவித்தனர். நேற்று இரவில் இருந்து ஒரு ambulance அங்கு நிற்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இதுவரை 7 உயிர்கள் ambulance உடனடியாக வராத காரணத்தால் பிரிந்திருப்பதையும் வருத்தத்தோடு பதிவு செய்தனர்.

குடியமர்த்தப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல்

பின்னர் மக்கள் அனவைரையும் சந்திக்கும் கூட்டம் நடந்தது. முதல் பிரச்சனையாக மக்கள் பேசியது தங்கள் வாழ்வாதாரம் குறித்து. பெண்மணி ஒருவர், ‘சார்…எனக்கு என்ன சார் வயசாகும்னு நினைக்கிறீங்க? அமைந்தகரைல துணி தச்சு மாசம் பத்தாயிரம் ரூபா சம்பாதிச்சேன். எனக்கு வயசு இப்போ 32. இங்க இருக்க கம்பெனில் கூப்பிடறாங்கன்னு போனா, 18 வயசுல இருந்து 30 வயசு வரைக்கும்தான் வேலைன்னு சொல்லிட்டாங்க. நான் இப்போ என்ன சார் பண்றது?’ என்றார்.

மற்றொரு பெண்மணி, ‘சார் நான் அண்ணாநகர்ல வீட்டு வேல செய்திட்டு இருந்தேன். இங்க இருந்து கோயம்பேட்டுக்கு பஸ் இல்ல. ஒரு சேர் ஆட்டோவுல 10 ஆளுங்களுக்கு மேல காலைல 7,8 மணிக்கெல்லாம் கிளம்புறோம். சாய்ஙகாலம் அதே வண்டில வருவோம். ஒரு நாளைக்கு 120 ரூவா. இப்படி இருந்தா நாங்க எப்படி சம்பாதிக்கிறது. இங்க நிறைய ஃபேக்டரி இருக்கு. வேலை கிடைக்கும்னு சொன்னாங்க. ஒரு வேலையும் இல்ல’ என்றார்.

மற்றொரு ஆண், ‘நாங்க சம்பாதிச்சு வர்றதை வழில புடுங்கிடறானுங்க.’ என்றார். ‘யார் பிடிங்குவது என கேட்டால், யார்னு தெரியல…மெயின் ரோட்ல இருந்து உள்ள வர்ற 2 கிமீ..திடீர்னு பிடுங்கிட்டு போயிடறாங்க..பல பேருக்கு இது மாதிரி நடந்திருக்கு. வர்ற வழில லைட் கிடையாது’

அடுத்ததாக அவர்கள் ‘சார், இங்க இருக்கற  பள்ளிகூடத்தில 5 வரைக்கும்தான் இருக்கு. 6வதுக்கு மெயின் ரோடு போய் அப்புறம் இன்னும் கொஞ்ச தூரம் போகணும். பஸ் இல்ல..பல பேர் படிப்ப விட்டுட்டு சும்மா சுத்துறானுங்க’ என்றார். கண்ணகி நகர் போல இந்த பகுதிகளிலும் கஞ்சா சுலபமாக கிடைப்பதாகவும் சொன்னார்கள்.

தண்ணீர் மிகப் பெரிய பிரச்சனை. அவர்களுக்கான குடி தண்ணீர் 3 நாளுக்கு ஒரு முறை மட்டுமே வருவதால், அவர்கள் கேன் வாட்டர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு கேன் 35-40 ரூவா சார்…எங்க பொழப்பும் போயி, எத்தன கேன் நாங்க வாங்குறது?’ என்றனர் இல்லத்தரசிகள்.

குறைகளை கேட்டுக்கொண்ட ஆணையரும், அவருடன் வந்திருந்த மற்ற அரசு அதிகாரிகளும் மக்களுக்கு சில விளக்கங்களை கொடுத்தனர். பல வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் அவற்றை விரைவில் முடித்து தருவதாகவும் உறுதியளித்தனர். ரேசன் கார்டிற்கு இன்னொரு முகாம் போடுவதாகவும், தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.

மக்கள் எழுத்துப்பூர்வமாகவும் தங்களின் குறைகளை கட்டு கட்டாக எழுதி கொடுத்தார்கள். தங்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படாவிட்டால் மறுபடியும் தாங்கள் எங்கிருந்து அழைத்துவர்ப்பட்டார்களோ அந்த இடத்திற்கே அனுப்புமாறும் கோரிக்கை வைத்தார்கள்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட ஆணையர், விரிவான அறிக்கை தயார் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக உறுதியளித்தார். இதுவரை குடியமர்வு செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலமாவது ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பும் அதே சமயம், திட்டமிடல் குறைபாடுகளுடன் அரசு இப்படி மறு குடியமர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற வலுவான கேள்வியை எழுப்புகிறது. மக்களின் மீது அதன் அக்கறையின்மை வெளிப்படுத்துகிறது.

இந்த காரணங்களுக்காகத்தான் வீடுகள் அருகாமையின் அமைத்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் மீண்டும் வைக்கப்படுகிறது. வீடுகள் அருகாமையில் அமைந்துவிட்டால், அரசாங்கம் புதிய இடத்தில் தர முடியாத கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அவர்களே இருக்கும் இடத்தில் தொடர முடியும். ஒரு தவறான கொள்கை முடிவெடுத்து, பல தவறுகள் தொடர காரணமாவதை விட, ஒரு சரியான கொள்கை முடிவால் எந்த வித தவறும் நடக்காமல் பார்த்துக்கொள்ள முடியும். அரசுகள் உணர வேண்டும்.

நாவலூர் படப்பையில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட அந்த இளைஞரே பேசினார் – ‘ஒரு நாள் சாயுங்காலம் ஏடிஎம்ல பணம் எடுத்திட்டு வெளிய வர்றேன். திடீர்னு ஒரு நாலு பேர் என்ன பிடிச்சு ஒரு வண்டில அடச்சானுங்க..நான் கத்துருதுக்குள்ள ஒரு ஊசி போட்டானுங்க..நான் மயக்கமாயிட்டேன். திடீர்னு ஒரு இடத்தில கண்ணு முழிச்சேன். பயங்கர இருட்டா இருந்தது. என்ன தூக்குனவங்க வெளியில டீ சாப்பிட்டு இருந்தானுங்க… நான் அப்படியே தப்பிச்சு பக்கத்துல் இருக்க ரயில்வே ஸ்டேசன்ல (விஜயவாடா) எதோ ஒரு வண்டில ஏறி படுத்தேன். என்னால கண்ணே திறக்க முடியல..விடின்சு பார்த்தா வண்டி சென்னை வந்திருச்சு…பாக்கெட்ல 120 ரூ இருந்திச்சு..ஒரு வழியா பழைய ஆபிஸ்க்கு வந்துட்டேன்.’ அவர் இயல்பான நிலைக்கு வர 1 வாரம் பிடித்துள்ளது.

 

கூவத்தையும், அடையாற்றையும் மீட்டெடுக்கும் பணி குறித்து நம் கட்டுரை –

With the CRRT in charge, can Chennai look forward to a cleaner Cooum? .

அதில் இருக்கும் சவால்கள், சிக்கல்கள் – குறிப்பாக கூவத்தின் ஓரமும், அடையாற்றின் ஓரமும் வாழ்ந்த மக்கள் மறு குடியமர்த்தப்பட்டதை குறித்தான கட்டுரைகள்.

Balwadi in Perumbakkam resettlement colony has a teacher who doesn’t read!

Slum clearance: Why the government must go beyond displacement

Hundreds stare at uncertain future as Thideer Nagar slum evicted  

Redeveloping Chennai slums without eviction: What are we missing?  

RTE violations rampant in Perumbakkam primary school for slum evictees  

Comments:

  1. Dhanasekar says:

    சிறப்பான பணி. பொது மக்களுக்கு தகுந்த நல்ல மறு வழிவகை செய்ய வேண்டும் இந்த அரசு & அரசு அதிகாரிகளும். அது வரை உங்கள் பணி தொடர வேண்டும். இது போன்ற குறிப்புகள் தொடர்ந்து பதிவிடுங்கள். வாழ்த்துக்கள்

    • Jagadheeswaran D says:

      மிக்க நன்றி. தொடர்ந்து பதிவிடுகிறேன்.

  2. Shenbakam N says:

    Good One Jagadees.

    The other side of coin doesn’t look good as well. For a field survey, when I interacted with women residents of Kannagi Nagar and Ezhil Nagar (30 houses almost), they were not ready for employment or any training for employment offered.

    The first thing they asked me is, “are you here to give us money”

    When I interacted with Community Development officer, He told, the girls are atleast receptive. The boys are not interested in anything.

    • Jagadheeswaran D says:

      Thank you.

      It’s true..me & my friend were talking about it last week..we say there is huge unemployment and on the other side, the ppl who get training under various Govt schemes and ppl getting placed in Govt Employment camps are turning up in low numbers..the attrition rate is also huge…

  3. Akilan says:

    Thank you for the detailed note on this issue.

  4. Kabali Palamalai says:

    Fact based article. Your dedication to the cause is visible from various posts in fb and protests you lead. Very sincere approach . Appreciable.

  5. பிரேம் மனோஜ் சுப்பிரமணியன் says:

    அரசு சார்பாக ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தாலும் செயல்பாடுகள் அரசு வழக்கம் போல மெத்தன போக்கை கடைப்பிடிப்பதாக உள்ளது, மக்களின் குறைகள் தீரும் வரை சம்மந்தபட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வழி வகை செய்ய வேண்டும். அதுவரை மக்களுக்கு உங்களை போன்றவர்கள் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்., இந்த பிரச்சனைகளை விவாத பொருளாக்க பட்டு பலரும் இந்த பிரச்சனைகள் பற்றி பேசும் போது மக்களுக்கு விடிவு காலம் பிறக்க வாய்ப்பு உள்ளது., நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Similar Story

Music, play, and community action help residents protect and celebrate Mumbai’s parks

Citizens are reclaiming their parks with LYPMumbai, an initiative that encourages the better use of open spaces through art and music.

They paved paradise and put up a parking lot/ With a pink hotel, a boutique, and a swinging hot spot. These words of the Joni Mitchell classic Big Yellow Taxi filled a corner of Pushpa Narsee Park in Juhu on a bright Sunday morning in March. Though the song was released in 1970, the words resonate in 2026, especially for this park. There have been several attempts to convert Pushpa Narsee Park into a parking lot, only foiled by the vigilance of the locals, says Anca Florescu Abraham, co-founder of Love Your Parks Mumbai (LYPMumbai). This initiative advocates for the…

Similar Story

Uthandi’s ₹91-crore ‘flood drain’: Is Chennai solving one problem by creating another?

The WRD's flood fix puts Uthandi at risk. Residents flag pollution, CRZ violations, aquifer damage, and threats to nearby fishing livelihoods.

The Straight-cut Flood Escape Channel project at Uthandi in the southern part of Chennai along East Coast Road was conceived by the Water Resources Department (WRD) as a flood mitigation measure, with a budget of ₹91 crores. The plan proposes a cut-and-cover drain through the VGP Layout in Uthandi, to connect the Buckingham Canal to the Bay of Bengal. The drain is supposedly meant to divert excess floodwater in Buckingham Canal during heavy rains, when areas around the Pallikaranai marsh and Okkiyam Madavu face flooding.  Work on the project started immediately after its inauguration in August 2025. However, residents of…